Friday, 30 July 2021

கம்பன் கவிநயம்.- 1(அவையடக்கம்)

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

    "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் 

      வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், 

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.." - மகா கவி பாரதியார்.

 இந்த வரிசையில் பாரதி கம்பனை முதலில் வைத்து பாடியதன் காரணம் கம்பனது கவி திறமை தான் என எண்ணத் தோன்றுகிறது. அந்த கம்பராமாயணத் தில்  உள்ள கவிதைகளை நான் படித்த போது அதில் 

என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய சில பாடல் வரிகள் குறித்தும்  மற்றும் ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் நான் தொடர் பதிவுகள் இடலாம் என நினைத்தேன். அதன் விளைவே இந்த முதல் பதிவு.

கம்பனைப் பற்றி கற்றறிந்த மேதைகள் எல்லாம் எவ்வளவோ எழுதியவைகள் எண்ணிலடங்கா. அவர்கள் முன்பு என் பதிவு கம்பன் தனது பாலகாண்ட த்தில் அவையடக்கம் என்ற தலைப்பில் பாடிய பாடல்களை ஒத்ததாகும்.

01. பாற்கடலை பார்த்து பூனை தான் அந்த கடலில் உள்ள பால் முழுவதும் குடித்துவிட முடியும் என நினைத்த செயல் போல் கம்பன் மேல் உள்ள பிரமிப்பால் இந்த பதிவு இடுகிறேன்.

"ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென.
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று. இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ"

02. நீயெல்லாம் கம்பனைப் பற்றி எழுதி அதை நாங்கள் படிக்கவேண்டியிருக்கிறதே என உங்களின் ஏச்சுக்கும் நான் ஆளாவேன் என நான் எண்ணினாலும் கம்பன் மேல் உள்ள அளப்பரிய பற்றினால் இதை பதிவிடுகிறேன்.
"வையம் என்னை இகழவும். மாசு எனக்கு
எய்தவும். இது இயம்புவது யாது எனின்.-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே."

03. கம்பன் எனும்  ஆழ்கடலுக்குள் மூழ்கி முத்து எடுத்த தமிழ் வித்தகர்கள் இந்த சின்னவனின் பதிவில் குறைகண்டு சினம் கொள்ள வேண்டாம் என வேண்டுகிறேன்.
"முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞருக்கு ஒன்று உணர்ந்தவென்:
‘பித்தர் சொன்னவும். பேதையர் சொன்னவும்.
பத்தர் சொன்னவும். பன்னப் பெறுபவோ?’

04. மதி முட்டும் மாடம் கட்டும் பொறியாளர் தன் சிறு பிள்ளை அதுபோல் ஒரு சிறு இல்லம் தரையில் தவறாக வரைந்தால் கோபம் கொள்வாரோ?. அது போல் என் இந்த சிறு முயற்சியில் குறைகாண்பின் கம்பனை கற்றறிந்த பெரியோர் மன்னித்தருள்க.

"அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தரையில் கீறிடின். தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி.
முறையின் நூல் உணர்ந்தாரும். முனிவரோ".

இந்த கம்பன் கவிதை பற்றிய "நடையில் நின்றுயர் நாயகன் ராமன் காதையின் கவி நயப் பார்வை " பதிவு பொதிகை சாரல் வீசும் தென்காசி நகரில் இருந்து பதிவிடுகிறேன்.
"நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே ".

இடம்-
தென்காசி                           அன்புடன்
30.07.2021.       ‌‌‌‌‌               // க. மாரியப்பன்//